Tuesday, August 17, 2010

மென்பொருள் வன்முறை

மென்பொருள் வன்முறைகள்
திலகபாமா

ஒரு ஊர்ல ஒரு பாட்டி இருந்தாளாம். மரத்தடியில் வடை சுட்டாளாம். காக்கா வடையைத் திருடிப் போய் மரத்தில் அமர்ந்ததாம்.பசியோடு வந்த தந்திர நரி காக்கையிடம் பாட்டுப் பாடச் சொல்லிக் கேட்டதாம். காக்கை பாட வடை கீழே விழ நரி எடுத்துக் கொண்டு ஓடியதாம்
திருடிய காக்கா தின்ன முடியாது ஏமாந்து பறந்ததாம்
1970 களில் எம் பாட்டி சொன்ன கதையாய் இருந்தது.
பாட்டி சுட்ட வடை எடுத்து வந்த காகம் மரத்தில் இருக்க தந்திர நரி ஏய்க்கப் பார்த்ததாம். “அழகிய குரல்” என்று சொன்ன பொய்யில் புத்திசாலிக் காகம் ஏமாறாது வடையைக் காலில் வைத்துப் பாட ஏமாந்த நரி பசியோடு சென்றதாம்.
2010 என் மகள் சொல்லும் கதையில் 70 களில் திருட்டுக் காகமாய் இருந்த பார்வை, புத்தி சாலிக் காகமாய் மாற்றப் பட்டு நரியிடமிருந்து பிழைத்த விதத்தில் திருடு மறக்கடிக்கப் பட்டும் விட்டது.பிரச்சனைகள் புதிதாய் முளைக்க முளைக்க சவால்கள் மறக்கப் பட்டு புதிய அர்த்தங்களுக்குள் அதன் களவாடித் தனங்களை மறைத்துக் கொள்கின்றன.
பத்தாண்டுகளுக்கு முன் வெளிநாட்டு வேலை தேடும் மோகமாய் குற்றஞ் சொல்லிக் கொண்டிருந்த நாம், தவிர்க்க முடியாது போன உலகமயமாக்கல் தாராளமயமாக்கல் உலகமே சிறு கிராமமாய் மாறிப் போனதின் விளைவாக வெளிநாடு போய் வேலை என்பதை இயல்பாக்கிப் போனோம்
இன்று “பிரதேசத்திற்குரியவர்களாக சுருங்கிப் போகாதீர்கள்” எனும் பரந்துபட்ட மனப் பான்மையின் முன்னால் அந்நிய அடிமைக் கூலிகளாய் உங்கள் அறிவாளித்தனங்களை விற்று விடாதீர்கள் என்று வெளிநாட்டில் வேலை தேடும் மோகம் கொண்ட இளைய தலைமுறைக்கு சொல்லிக் கொண்டிருந்ததை மறந்து போனோம்.
ஆனால் சொந்த நாட்டிலேயே வலைத் தளங்களும் மென் பொருள் வடிவமைப்புகளும் உள்நாட்டு உற்பத்திக்கு ஒரு பயனும் தராத, வெளிநாட்டு முதலாளிகளுக்கு இங்கிருந்து அடிமைக் கூலியாய் வேலை செய்யும் மனோநிலையை அதன் அதிகச் சம்பளம் எனும் பசுத்தோல் போர்த்து புலிகளாக உலவ விட்டுக் கொண்டிருக்கிறோம். அவை இரவுகள்ல் யாரும் அறியாப் பொழுதினில் இரத்தம் குடித்தபடி இருக்கின்றன.
பயோ டெக்னாலஜி மெக்கானிகல் இப்படி எத்துறையில் பட்டம் பெற்றிருப்பினும் 30000, சம்பளம் என்பதில் மெய்மறந்து மென்பொருள் வடிவமாக்கலில் அதுவும் வெளி நாட்டு முதலாளிகளுக்கு வடிவமைப்பதில் ஓயாது குளிரில் உறைந்த படி வேலை செய்யும் படித்த கூலிகளாக , படித்த இயந்திரங்களாக ,சுரணையற்று வேலை செய்பவர்களுக்கு, நாங்கள் நம்பிக்கை இழக்கவைக்கப் பட்டு சொன்னதையே திருப்பச் சொல்லும் செய்ததையே திரும்பச் செய்யும் அடிமைகளாக மாற்றப் பட்டு விட்டோம் என்பதையும் அது மனிதனில் மென்பொருள் நிகழ்த்தும் வன்முறை என் உணருவார்களா, உணர முடியா வண்ணம் சம்பளமும் ஒரே மாதத்தில் அது தந்து விட்ட சுகவாழ்வும் கண்ணை, புத்தியை மறைத்து நிற்கிறது.

மென் பொருள் நிறுவனங்களுக்குள் கணிணியின் முன் ‘எண்டர்’, ‘டேப்’ இப்படி பொத்தான்களில் நாளை எளிமைப் படுத்திச் சுருக்கி விட்டு ஆணும் பெண்ணும் சுதந்திரமாய் இருப்பதாய் சொல்லிக் கொள்கின்ற தருணங்களுக்கு அப்பால் யாவரும் ஒருவர் மேல் ஒருவர் நம்பிக்கையற்றவர்களாகவும் பார்க்காத நேரத்தில் அடுத்தவர் மனத்தை வேவு பார்க்கிறவர்களாகவும் , சம்பளமும் தொழிலும் இருக்கின்ற நினைப்பில் மாறுதல்களை எதிர்கொள்ள தயங்குபர்களாகவுமே இருக்கின்றார்கள்.
எனக்குத் தெரிந்த பெண் ஆண்களோடு சரிநிகராக பழகி விட மென்பொருள் நிறுவனத்தில் வாய்ப்பு நேர்ந்து விட்ட போதும் அது தரவேண்டிய தைரியத்தை விட சந்தித்து விட்ட ஆண்களின் பொய்மையில் பார்க்கின்ற எல்லார் பேரிலும் அவநம்பிக்கையோடு கேள்வி கேட்பதையே வளர்த்திருக்கின்றாள். அந்த அவநம்பிக்கை தந்த பயம் அவள் வீட்டில் அவளுக்கு பார்த்திருக்கின்ற பார்த்த எல்லா வரன்களிலும் ஏதாவதொரு குற்றம் சொல்லவே வைக்கின்றது. இன்னும் அவள் 32 வயது அம்மா அப்பாவோடு வரன் தேடிக் காத்திருக்கும் பிரம்மச் சாரிணி
வேலையும் பொருளாதார பலமும் அவளுக்கு அவள் கால்களுக்கு பலமாகிப் போயிருக்க அவள் திருமண சாகரத்தில் வருகின்ற இடமாற்றம், சூழல் மாற்றம், இவற்றில் நீந்துகின்ற இலகு மனத் தன்மையை இழந்து கட்டி தட்டிப் போய் கரையிலேயே நிற்கின்றாள்.
வெறும் பி .ஏ பட்டம் முடித்து வீட்டுக்குள்ளே இருந்த பெண்கள் ஏற்றுக் கொள்ள முடிந்த மாறுதல்களை மாறுதல்களினால் வரும் பிரச்சனைகளை சந்தித்த திடமும் குழைவும், ஸ்திரமென நம்பியிருக்கின்ற வேலை கொண்ட பெண்களிடம் இல்லை என்பது கண்கூடு இன்னமும் சொல்லப் போனால் அவர்கள் பற்றியிருக்கின்ற வேலை பறி போனால் வாழ்க்கையே நமதில்லை எனும் அவநம்பிக்கையையும் சேர்த்தே வளர்த்திருக்க்றது என்று சொன்னால் மிகையில்லை. இன்னும் இதுவரை ஆண்களையே சார்ந்து பழகியிருந்த பெண்கள் , அதை பொருளதார முன்னேற்றத்தில் சுயச் சார்பு அடைந்து விட்டார்கள் என்று நம்புவதை பொய் என நிரூபித்து இப்பொழுது இவர்கள் வேலையை சார்ந்து இருக்கப் பழகி இருக்கின்றார்கள் என்பதுவே நிஜம்.
திருமணம் சமூக அந்தஸ்தாகிப் போன இடத்திலிருந்து கொண்டு கண்ணீர் காய்ந்து போன விழியோடு கட்டி தட்டிப் போன மகளை அடித்தால் நொறுங்கி விடுவாளோ எனும் அக்கறையோடும் இலகுவாகி நீந்த முடியாதவளாய் இருக்கிறாளே எனும் கவலையோடும் “ நெஞ்சு வலிக்கிறது” “ பிள்ளைகள் எங்களைப் புரிந்து கொள்ளவேயில்லை” என்று பேசும் தகப்பன் குரலுக்கு கைபிடித்து அமர்த்திப் போகும் தாயை மென்பொருள் வன்முறையின் குத்தில் வழியும் இரத்தமும் வேதனையும் மூழ்கடித்துக் கொண்டிருக்கின்றது.
நன்றி.www.adhikaalai.com

1 comment:

Murugeswari Rajavel said...

வன்முறை வழக்கமாகிப் போனது.